jeudi 31 juillet 2014

கம்பன் இதழ் - 1



14/01/2001
அன்று வெளிவந்த
கம்பன் இலக்கண இலக்கியத் திங்கள் இதழ் - 1
[விரும்புவோா் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்]

mercredi 30 juillet 2014

பாண்டியன் ஜீவிதா



திருமிகு அ. பாண்டியன் ஜீவிதா இணையர் 
திருமண வாழ்த்துமலர்

மின்பூ வலையை அரசாளும்
     அன்புச் செல்வன் பாண்டியனும்
பொன்பூச் செல்வி ஜீவிதாவும்
     போற்றும் வாழ்வில் இணைந்தனரே!
இன்பூ பூத்து மணக்கட்டும்!
     இதயம் இனிப்பில் மிதக்கட்டும்!
என்பூஞ் சொற்கள் தூவுகிறேன்!
     எழில்பூந் தமிழாய் வாழியவே!

மலர்ந்து மணக்கும் சோலையென!
     மனத்தை மயக்கும் மாலையென!
அலர்ந்து மணக்கும் எண்ணங்கள்
     அமுதைச் சுரக்கும் வண்ணமென!
புலர்ந்து மணக்கும் நற்காலை
     புலமை மணக்கும் இன்பமென!
கலந்து மணக்க மணமக்கள்
     காலம் மணக்க வாழியவே!

13.07.2017

mardi 29 juillet 2014

செய்யுள் இலக்கணம் - பகுதி 2



 
(பாவேந்தா் பாரதிதாசன் அவா்கள் 1926 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட மயிலம் சுப்பிரமணியா் துதியமுது நுாலின் முகப்பு அட்டை)

புதுவைப் புலவன்
வெண்டளையால் வந்த எண்சீர் விருத்தம்

புதுவைப் புலவன் புகழ்த்தமிழ்ப்பா வேந்தன்
     புனைந்த மயிலம் துதியமுதைப் பாடப்
புதுமை அணிபல பூத்திடக் காண்பாய்!
     பொழிலென மின்னும் தமிழருள் ஏற்பாய்!
மதுவைக் குடித்து மயங்கிடும் வண்டாய்
     மரபைக் குடித்து மகிழ்ந்திடும் நெஞ்சம்!
பொதுமை மலர்ந்து பொலிந்திட வேண்டும்
     புரட்சிக் கவிஞன் புகன்றநெறி போற்று!

பாட்டின் இலக்கணம்

1. ஒவ்வோர் அடியும் வெண்டளை கொண்டிருக்க வேண்டும்.
2. ஓரடிக்கும் அடுத்த அடிக்கும் வெண்டளை கட்டாயமில்லை.
3. அரையடிதோறும் இறுதியில் தேமாச்சீர் அமையவேண்டும்.
4. மற்ற இடங்களில் காய், விளம், மாச்சீர்கள் அமையலாம்
5. ஒவ்வோர் அரையடியிலும் மூன்றாம் சீர் காய் அல்லது விளமாக அமைய வேண்டும்.
6. ஒன்று ஐந்தில் மோனை வரவேண்டும்

கவிஞா் கி. பாரதிதாசன்
29.07.2014 

dimanche 27 juillet 2014

வலைப்பூ என் கவிப்பூ - பகுதி 30




நண்பர்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்

வணக்கம்!

வாட்டி வதைக்கின்ற நாட்டு நிலைமையினை
ஓட்டி அழித்தல் உயர்வு!

----------------------------------------------------------------------------------------------

வணக்கம்

உள்ளம் தெளிய உரைத்த கதைபடித்தேன்
அள்ளும் உணர்வை அணைத்து!

----------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

நற்கணித மேதைக்குக் கட்டிய இப்படைப்புப்
பொற்கோயில் கொண்ட பொலிவென்பேன்! - சொற்சோ்
கரந்தைச் செயகுமார் கன்னல் தமிழ்கற்ற
பரந்த அறிவின் பயன்!

----------------------------------------------------------------------------------------------

வணக்கம்

கம்பன் வடித்த கவிதைகளைக்
       
கற்றால் தமிழின் சுவையறிவார்!
நம்பன் இராமன் மொழியழகும்
       
நங்கை சீதை விழியழகும்
நம்முள் தங்கிக் கமழ்ந்திட்டால்
       
நற்றேன் பாயும் வாழ்வினிலே!
எம்மண் கொண்ட மாண்புகளை
       
இயம்பும் சீதை பெருங்கதையே!

----------------------------------------------------------------------------------------------

மிண்டும் வணக்கம்

ரசம் என்பது தமிழ்ச்சொல் அன்று எனவே

கம்பன் சுவையென்றால் கம்பன் வளமென்றால்
நம்மொழி ஓங்குமே நன்கு!

----------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

தமிழ் அல்லாத சொற்களை நீக்குதலும்
புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்குதலும்
தமிழ் காப்போர் கடமை!

பழமை எனயெண்ணி அப்படியே ஆளுதல் சிறப்பன்று!

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ் என்ற நிலையை
உருவாக்கவேண்டம்!

எந்த நிலையிலும் பிரஞ்சுக் காரர்கள் ஆங்கிலம் கலந்து எழுதவோ பேசவோ மாட்டார்கள்!

எல்லா மொழியும் கலந்து வளர்ந்துள்ள ஆங்கில மொழியிலும் தனித்த ஆங்கில இலக்கியப் போக்கு உண்டு!

தனித்தமிழ் போற்றும் தமிழர்தம் நூலைப்
அணிந்து மகிழும் அகம்!

----------------------------------------------------------------------------------------------

வணக்கம்

சாதி சமய சழக்குகளைச்
   சாற்றும் உலகைத் தூளாக்கு!
மோதி மிதித்துப் பகைவர்களை
   முன்னைத் தமிழின் துயர்போக்கு!
போதி மரத்து நற்புத்தன்
   புகன்ற அன்பை வழியாக்கு!
நீதி ஏந்திக் கமழ்தென்றல்
   நிலத்தில் வீச மகிழ்கின்றேன்! 

----------------------------------------------------------------------------------------------

வணக்கம்

முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

போட்டியில் வென்று பொலிகின்றீர்! வாழ்த்துகளைப்
பாட்டில் படைக்கின்ற பாரதிநான்! - நாட்டமுடன்
சொன்னேன் புகழ்வெண்பா! சூடிச் சரவாணி
இன்றேன் தமிழை இயம்பு!

----------------------------------------------------------------------------------------------

புலவர் அவர்களுக்கு வணக்கம்

சந்தம் ஒலித்திடச் சாற்றிய பாட்டினில்
சிந்தை மயங்கும் செழித்து!

----------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

பிறப்பின் நிலையைச் சிறப்புடன் சென்னீர்
பறந்து மகிழ்ந்தேன் படித்து!

----------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

தன்னைப் போற்றும் தமிழ்மைந்தன்
   தமிழைப் போற்ற மறந்ததுமேன்?
பொன்னைப் பொருளைத் தேடுகிறான்!
   புகழைக் குழியில் மூடுகிறான்!
தென்னை மரத்து வேரினிலே
   தீயை மூட்டி எரிப்பதுவோ?
அன்னைத் தமிழின் பற்றேந்தி
   அளித்த பதிவை வணங்குகிறேன்!

23.02.2013

vendredi 25 juillet 2014

செய்யுள் இலக்கணம்



அருளுகவே!

வெண்டளையால் வந்த அறுசீர் விருத்தம்!

அருமலை வாழும் அழகா!
     திருமலை நாதா! வணங்குகிறேன்!
பெருங்கலை வாணா! பெயர்பல
     பெற்றொளிர் வண்ணா!உன் பொன்னடிகள்
தரும்மலைச் செல்வம்! இதற்கு
     வருநிலை என்னுள் வளர்க்காதே!
ஒருநிலை யோடுனை ஒன்றி
     உயர்நிலை காண அருளுகவே!

பொருள் விளக்கம்:

அருமை நிறைந்த திருப்பதி மலையில் வாழும் அழகனே! என் தலைவனே! இந்த உலகத்தைப் படைத்துக் காக்கின்ற கலைஞனே! பற்பல வண்ணங்கள் உள்ளனபோல், எவ்வுலக மக்களும் வணங்குவதற்குப் பலபெயர்களைப் பெற்றவனே! உன்னுடைய பொன்னொளிரும் திருவடிகளைக் கண்டால் மலைபோன்று எல்லாச் செல்வமும் கிடைக்கும். இந்தச் செல்வங்களைத் தேடி வருகின்ற நிலையை எனக்குத் தரவேண்டாம்! வடலூர் வள்ளல் பெருமான் பாடிய ஒருமையுடன் நினதுதிரு மலரடியை நினைக்கின்ற நன்நிலையை போல், உன்னை மட்டுமே எண்ணி உன்னழகைப் பார்த்துப் பார்த்துக் களிப்புறும் நிலையை மட்டும் எனக்கு அருளுக.

பாட்டின் இலக்கணம்!

1. ஒவ்வொரு அடியும் வெண்டளையில் அமைய வேண்டும்.
2. அடியின் இறுதியிலிருந்து அடியின் தொடக்கத்திற்கு வெண்டளை பார்க்க வேண்டியதில்லை.
3. ஆறாம் சீர் காய்ச்சீராக வரவேண்டும்
4. நான்கடிகளும் ஓரெதுகை பெற வேண்டும்.
5. அடிதோறும் நான்காம் சீரில் மோனை வரவேண்டும்.

25.07.2014 

mercredi 23 juillet 2014

கல்வியே கண்




"கல்வியே கண்"

செல்லும் இடமெல்லாம் சீர்களைச் சேர்த்திட
வெல்லும் அடலேறாய் விஞ்சிட - தொல்லுலகில்
யாண்டும் புகழ்பரவத் தீண்டும் துயரகல
வேண்டுமே கல்வி விளக்கு!

சாதிச் சழக்குகளை மோதி மிதிக்கின்ற
நீதி நிலத்தில் நிலைத்திட! - ஆதியிலே
ஆண்ட அறநெறிகள் மீண்டும் அரங்கேற
வேண்டுமே கல்வி விதை!

கல்வி உடையவரே கண்ணுடையர் என்றழகாய்ச்
சொல்லி மகிழும் சுடர்க்குறளே! - முல்லைமலர்க்
காடொளிரும் வண்ணம் கருத்தொளிர, எப்பொழுதும்
ஏடொளிரும் வண்ணம் இரு!

நல்லோர் திருவடியை நாடி நலமெய்த!
வல்லோன் எனும்பெயர் வந்தெய்த! - அல்லல்
அகன்றோட! அன்பாம் அமுதூறக் கல்வி
புகுந்தொளிர வேண்டும் புலம்!

கற்க வயதேது? கற்ற நெறியேற்று
நிற்க குறையேது? நெஞ்சுற்ற - தற்செருக்கு
விண்ணொளி கண்ட வெண்பனி போல்மறையும்!
ஒண்மதி கல்வி உடைத்து!

உண்மை ஒளியினையும் ஓங்கும் வடலூரார்
வண்மை வழியினையும் மாண்பினையும் - வெண்மை
மலரொக்கும் நெஞ்சினையும் வாய்த்துமகிழ் வெய்த
மலையொக்கும் கல்வியுடன் வாழ்!

பிறப்பொக்கும் நன்னெறியைப் பேணி உலகோர்
சிறப்பொக்கும் வாழ்வில் செழிக்க! - நிறைகல்வி
ஒன்றே உயர்மருந்தாம்! நன்றே இதைஉணர்ந்தால்   
அன்றே அமையும் அரசு!

படத்தில் நடிக்கும் நடிகரைப் பார்த்துக்
கிடக்கும் செயலொழிய! கீர்த்தி - படைக்கும்
நிலைகாண! நீண்ட நெடும்பார்வை காண
கலைகாண கல்வியே கண்!

எல்லாம் இழந்தாலும் என்றும் உடனிருக்கும்!
கொல்ஆள் வினைக்கும் குழிபறிக்கும்! - சொல்லாலும்
தீயாலும் போகா! தெளிந்து படித்திட்டால்
ஓயா தொளிரும் உயிர்த்து!

பெருஞ்செல்வம் பேரரணிகள் பெற்றாலும், ஈடில்
அருஞ்செல்வம் கல்வி அறிக! - வருஞ்செல்வம்
குன்றிக் குறைந்திடலாம்! கற்றவை நம்முயிரோடு
ஒன்றி இருக்கும் ஒளிர்ந்து!

23.07.2014

வலைப்போதை



வலைப்போதை!

கள்போதை தருவதுண்டு! காதல் வீசும்
     கண்போதை தருவதுண்டு! நெஞ்சைக் கவ்விச்
சொல்போதை தருவதுண்டு! ஆசை பொங்கிச்
     சுகப்போதை தருவதுண்டு! புகழாம் செல்வி
நல்போதை தருவதுண்டு! நாதன் பொற்றாள்
     நறும்போதை தருவதுண்டு! கொடிய கஞ்சா
வல்போதை தருவதுண்டு! பதிவை ஏற்றும்
     வலைப்போதை உனக்கேனோ சொல்வாய் நெஞ்சே?

நீரில்லை என்றாலும்! நெஞ்சுள் இன்பம்
      நிலையில்லை என்றாலும்! வாழ்ந்து வந்த
ஊரில்லை என்றாலும்! ஒட்டி நின்ற
      உறவில்லை என்றாலும்! முன்னோர் சேர்த்த
சீரில்லை என்றாலும்! செய்யும் செய்கை
      சிறப்பில்லை என்றாலும் பரவா இல்லை!
பாரெல்லை வரைகாட்டும் வலையை ஓர்நாள்
      பார்க்காமல் இருப்பாயோ பகர்வாய் நெஞ்சே?

அலைபெருகி வருவதுபோல்! வன்பே ராசை
      அகங்பெருகி வழிவதுபோல்! பொருள்கள் மீது
விலைபெருகித் தொடர்வதுபோல்! தீயோர் வாழ்வில்
      வீண்பெருகிப் படர்வதுபோல்! பொல்லா நாட்டில்
கொலைபெருகி நடப்பதுபோல்! வஞ்சம் என்றும்
      குணம்பெருகிக் கூன்பெருகிப் போதை கொண்டு
வலைபெருகிப் பதிவேற்றி வாக்கும் பெற்று
      தலைக்கனத்தைக் கொள்ளுவதோ சாற்றாய் நெஞ்சே?

உடனிருந்து கழுத்தறுக்கும் வஞ்சம் போன்றும்
      உள்ளொன்று வெளியொன்று பேசல் போன்றும்
கடனிருந்து களிக்கின்ற ஈனம் போன்றும்
      கனியிருந்து காய்கவரும் ஊனம் போன்றும்
குடமிருந்த மாங்கொத்தைக் கண்டு வாடும்
      குப்பையெனக் கூளமென நாற்றம் போன்றும்
விடமிருந்த இடம்மாறி உன்னுள் உற்று
      விளையாடும் வலைப்போதை ஏனோ நெஞ்சே?

வலைநோக்கம் என்னென்று வகுக்க வேண்டும்!
      வரும்காலம் நம்பதிவை வாழ்த்த வேண்டும்!
கலைநோக்கம் இல்லாமல், மொழியைக் காக்கும்
      கவிநோக்கம் இல்லாமல் எழுதல் வீணே!
தொலைநோக்கப் பார்வையுடன் கருத்தை ஆய்ந்து
      தொடுக்கின்ற பதிவுகளைக் கற்றோர் ஏற்பர்!
இலைநோக்கம் என்றுரைத்துப் பொழுதைப் போக்கி
      இழிவேந்தும் வலைப்போதை ஏனோ நெஞ்சே?

22.07.2014

mardi 22 juillet 2014

மூங்கில் காற்று முரளிதரன்




மூங்கில் காற்று முரளிதரன்
பிறந்தநாள் வாழ்த்துமலா்

எங்கள் முரளிதரன் சங்கத் தமிழினிமை
பொங்கும் தமிழனெனப் போற்று!

அன்பு முரளிதரன் ஆய்ந்த கருத்தெல்லாம்
இன்புறச் செய்யும் இனிப்பு!

வல்ல முரளிதரன் வண்ண வலைப்பதிவின்
செல்ல மகனெனச் செப்பு!

நண்பர் முரளிதரன் நன்மூங்கில் காற்றானார்
பண்ணின் இனிமை படைத்து!

இன்தேன் முரளிதரன் ஈடில் தமிழாகப்
பொன்போல் வாழ்க பொலிந்து!

கன்னல் முரளிதரன் கற்கண்டுப் பாக்களையே
என்றும் பொழிக இனித்து!

வெல்க முரளிதரன் மேன்மை நெறியேற்று
மல்க புகழுடன் மாண்பு!

இனிய முரளிதரன் எல்லாம் அடைந்து
கனிபோல் சுவைவளம் காண்!

சீரார் முரளிதரன் செந்தமிழ் காக்கின்ற
பேரார் பெருமைப் பெருக்கு!

இசைசேர் முரளிதரன் என்றென்றும் வாழ்வில்
விசையுடன் காண்க விழா!

முத்தொளிர் நெஞ்சன் முரளிதரன் செம்மலர்த்தேன்
கொத்தொளிர் நெஞ்சனெனச் கூறு!

மூங்கிலிசை காற்று முரளிதரன் காண்கவே
பூங்குவளைக் காடாய்ப் புகழ்

22.07.2014

dimanche 20 juillet 2014

கவிமணி ச. விசயரத்தினம்



கவிமணி ச. விசயரத்தினம் இராசலட்சுமி இணையரின்
நல்லற வாழ்த்து மலர்

இன்ராச லட்சுமியும் நன்விசய ரத்தினமும்
பொன்னாரம் போன்று பொலிந்தவர்கள்! - என்றென்றும்
வாழ வழிகாட்டும் மக்களைத் தந்தவர்கள்!
தாழப் பணிந்தேன் தலை!

கன்னித் தமிழ்பாடும் கன்னல் கவிமணியார்
சென்னி தரித்தார் செழுந்தமிழை! - பன்னீர்போல்
உள்ளம் மணக்கும் உயர்விசய ரத்தினனார்
அள்ளும் தமிழின் அமுது!

முன்னோர் மொழிந்த நெறியேற்றும்
     முல்லைக் காடாய் வழியேற்றும்
தன்னேர் இல்லாத் தண்டமிழின்
     தலைமை மகனாய்ப் புகழேற்றும்
பொன்னேர் பூட்டி உழுதிட்ட
     புவிபோல் பொங்கும் வளமேற்றும்
இன்தேன் விசய ரத்தினனார்
     ஏந்தல் வாழ்க பல்லாண்டே!

செம்மைக் கம்பன் கழகத்தின்
     சிறப்புத் தலைவர் பணியாற்றி,
அம்மை அப்பன் திருவடியை
     அகத்துள் பதித்துத் தினம்போற்றி,
இம்மை மறுமைச் சீரோங்க
     எழிலார் உரைகள் பலவாற்றி,
செம்மல் விசய ரத்தினனார்
     செழித்து வாழ்க பல்லாண்டே!

கொடுத்த நூல்கள் அத்தனையும்
     கொஞ்சும் தமிழின் சுவைகூறும்!
தொடுத்த கேள்வி விடையாவும்
     கூர்த்த மதியின் நலம்பாடும்!
எடுத்த செயல்கள் இவ்வுலகில்
     என்றும் ஒளிரும் புகழ்சூடும்!
நெடும்சீர் விசய ரத்தினனார்
     நீடு வாழ்க பல்லாண்டே!

அய்யன் வீரன் மணிக்கண்டன்
     அழகில் காதல் பூண்டிடுவார்!
நெய்யின் வாசம் வீசுகிற
     நேசக் கதைகள் தீட்டிடுவார்!
மெய்யும் உயிரும் சேர்வனபோல்
     மேன்மை யாவும் இணைந்தனவே!
உய்யும் விசய ரத்தினனார்
     உவந்து வாழ்க பல்லாண்டே!

பேரார் குடியைப், பெருங்கூத்தன்
     பேணிக் காத்தே அருள்செய்ய!
ஊரார் உறவை, நல்லுமையாள்
     உலகார் வண்ணம் ஒளியேற்ற!
பாரார் தமிழைச் பரப்பிடவே
     பரமன் தொண்டர் வழிகாட்ட!
சீரார் விசய ரத்தினனார்
     சீர்த்தி வாழ்க பல்லாண்டே!

18.07.2014

vendredi 18 juillet 2014

அணி இலக்கணம் - 2



சொற்பின் வருநிலையணி

முன் பதிவில் சொற்பொருள் வருநிலையணியைக் கண்டோம். ஒரு செய்யுளில் ஒரு சொல் அதே பொருளில் பலமுறை வருவதைச் சொற்பொருள் வருநிலையணி எனப்படும். இதற்கு எதிர் நிலையாக ஒரு சொல் வேறு வேறு பொருளில் பலமுறை பயின்று வருவது சொற்பின் வருநிலையணி எனப்படும்.

"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை"

உண்பவர்க்கு நல்ல உணவுகளை உண்டாக்கி  அவற்றை உண்பவர்க்குத் தானும் உணவாய் நிற்பது மழை ஆகும்.

துப்பு = உண்ணுதல், தூய, உணவு

எனத் "துப்பு" என்னும் ஒரு சொல் பலமுறை வேறு வேறு பொருளில் பயின்று வந்துள்ளதால் இக்குறளில் சொற்பின் வருநிலையணி அமைந்துள்ளது.

------------------------------------------------------------------------------------------------------

1.
மரைக்கண் தொடுக்கும் மரைப்பார்வை கண்டு
மரையெனப் போகும் மனம்!

மரை = தாமரை, மான், தவளை, திருகுதல்.

2.
மதியவள் என்னை மதியாது பார்க்க
மதியுறும் இன்ப மயக்கு!

மதி = நிலவு, திமிர், அறிவு.

3.
மடலென நெஞ்சுள் மணக்கும் மடல்கள்
மடலுற ஏகும் மனம்!

மடல் = தாழை, கடிதம், மடலேறுதல்.

4.
கொடிபறக்கும்! மண்ணில் கொடிதழைக்கும்! அன்பின்
கொடிதொடுக்கும் மின்னற் கொடி!

கொடி =  துணிக்கொடி, மலர்க்கொடி, அன்புக்கயிறு, மின்னிடை.

5.
கண்டுமலர் கண்டு கவிமனம் கட்டுண்டு
கண்டாகச் சுற்றுதடி கண்!

கண்டு = தேன்மலர், காணுதல், நூற்கண்டு.

6.
அணியிழை தந்த அணியொளிர் வாழ்க்கை
அணித்தமிழ் நல்கும் அமுது!

அணி = அழகு, பெருமை, இலக்கணம்

7.
பொன்றளைத் தாள்கண்டு பூந்தளை பின்கண்டு
வெண்டளை மேவும் விரைந்து!

தளை = சிலம்பு, மலர்ச்சரம், வெண்பா

8.
நற்றகை நங்கையின் பொற்றகை போற்றிடச்
சொற்றகை ஊறும் சுடர்ந்து!

தகை = பெருமை, அழகு, இயல்பு

9.
தையல் நடம்புரியும் தையல், எனதுயிரைத்
தையலெனத் தைத்தாள் தனித்து!

தையல் = அழகு, பெண், துணி தைத்தல்.

10.
சிலையழகுக் செல்வியவள் சீரழகு கண்டு
சிலையழகன் ஆனான் சிலை!

சிலை = மலை, வில், கற்சிலை

கவிஞா் கி. பாரதிதாசன்
18.07.2014