mardi 30 septembre 2014

ஓவியச் செல்வர்




ஓவியச்செல்வர் ழில்பேர் தெலாப்ளோர்!

காவியக் கம்பன் கழகத்தைக் காக்கின்ற
ஓவியச் செல்வர் உயர்ழில்பேர் - தேவிமரி
நற்றிருத் தாளினை நன்கேத்தி வாழ்கவே!
பொற்றிரு உள்ளம் பொலிந்து!

நெஞ்சத்தைக் கவ்வுகின்ற வண்ணம் தீட்டி
     நிலைத்தபுகழ் பெற்றுள்ளார் ழில்பேர் அய்யா!
மஞ்சத்தை, மலரழகை, மாலை சாய்ந்து
     மணக்கின்ற மதியழகை, மலையை, காட்டை,
பஞ்சத்தை, பகலிரவை, பாயும் ஆற்றை,
     பாடுகின்ற பசுங்குயிலை, பரமன் நற்றாள்
தஞ்சத்தை, தண்டமிழைக் கண்முன் ஏந்தித்
     தருகின்ற சித்திரங்கள் நம்முன் பேசும்!

ஓவியத்தின் நுட்பங்கள் யாவும் கற்ற
     ஒப்பில்லா உயர்கலைஞர் ழில்பேர் அய்யா!
பாவியத்தின் நுட்பங்கள் அறிந்த என்னுள்
     படையெடுத்து இவர்வண்ணம் ஆட்சி செய்யும்!
சோவியத்தின் புரட்சியினைப் பாடி நின்ற
     சுடர்க்கவிஞன் பாரதிபோல் பார்வை கொண்டு
காவியத்தின் காட்சிகளைக் கண்முன் ஏந்திக்
     கை..தீட்டும் சித்திரங்கள் நம்முன் பேசும்!

எம்கழக ஓவியராய்ப் பணிகள் ஆற்றி
     இனியதமிழ் வளர்கின்ற ழில்பேர் அய்யா!
செம்பவளத் திருச்செல்வன் கர்த்தர் சீரைச்
     செபித்துருகும் அன்புடையார்! பண்பின் செம்மல்!
நம்மழகு மனத்துக்குள் நலங்கள் நல்கி
     நடந்துவரும் பாமரனின் தொண்டைப் போற்றி
தம்மழகுச் செயலாற்றி வாழும் வல்லார்
     தந்துவக்கும் சித்திரங்கள் நம்முன் பேசும்!

27.09.2014 
                                                                                                        

samedi 27 septembre 2014

மணமக்கள் வாழ்க! வாழ்க!!




மணமக்கள் வாழ்க! வாழ்க!!

எழிற்சார நாயகி இன்பால கந்தன்
பொழிலாக வாழ்வைப் புனைக! - மொழியழகு
மின்னும் வியன்தமிழாய் இன்பத்தை மீட்டுக!
என்றும் உயிர்கள் இணைந்து!

எந்நாளும் புகழாளும் தலைவர்! எங்கள்
     எம்.சி.ஆர் நெறிபோற்றும் பத்ம நாபர்
அந்நாளும் இந்நாளும் காக்கும் மாண்பை
     அகங்கொண்ட பூங்குழலி இணையர் பெற்ற
செந்நாவு தமிழ்மறவன் பால கந்தன்
     சீர்சார நாயகியின் இதயம் சேர்ந்தார்!
வந்தாளும் செல்வங்கள் யாவும் ஏற்றுத்
     தந்ததன தமிழாக வாழ்க! வாழ்க!!

அடுக்குமொழி யழகர்!நல் லன்பின் செல்வர்!
     அழகுதமிழ்க் கோபால கிருஷ்ணர்! மேன்மை
தொடுக்குமொழி யரசி!நற் சாந்த செல்வி!
     தூயமனக் கலைவாணி இணையர் பெற்ற
மிடுக்குவிழி பேசுகின்ற ஆடல் நங்கை
     வியன்சார நாயகியைப் பால கந்தன்
கொடுக்கும்கைப் பற்றிவாழ்க! கிளிகள் கொஞ்சும்
     கோலமெலாம் குளிர்ந்தேற்று வாழ்க! வாழ்க!!

கற்கண்டு மலைகாண்க! காதல் பொங்கும்
     கலைகண்டு மனம்மகிழ்க! தமிழ்த்தாய் ஓங்க
நற்றொண்டு தினம்செய்க! முன்னோர் வாழ்ந்த
     நயங்கண்டு நலம்பெறுக! இனிக்கும் இன்பச்
சொற்கொண்டு நடம்புரிக! விழிகள் தம்முள்
     சுடர்கொண்டு வழியுணர்க! விழிகள் தம்முள்
விற்கொண்டு எழில்காக்கும் விந்தைச் சார
     நாயகி,நம் பாலகந்தன் வாழ்க! வாழ்க!!

சொல்லாண்டு புகழ்பெற்ற கம்பன் போன்று
     சுவையாண்டு மணமக்கள் வாழ்க! வாழ்க!!
நல்லாண்டு தந்திட்ட குறளார் போன்று
     நலமாண்டு மணமக்கள் வாழ்க! வாழ்க!!
வில்லாண்டு நமைக்காக்கும் இராமன் சீர்கள்
     விளைத்தாண்டு மணமக்கள் வாழ்க! வாழ்க!!
பல்லாண்டு பல்லாண்டு பாக்கள் பாடிப்
     பாரதிநான் வாழ்த்துகிறேன் வாழ்க! வாழ்க!!

06.09.2014
                  

mardi 16 septembre 2014

புத்துலகு - பகுதி 3





புத்துலகைப் படைத்திடுவோம்

முடிப்பு கவிதை

கீதை கொடுத்தான் மலர்மகளின்
        கேள்வன் பார்த்த சாரதியே!
சீதை மன்னன் எழில்ராமன்
        சிந்தை யாண்ட அன்புதனை
மேதை கம்பன் கொடுத்தனனே!
        மேன்மை கொடுக்கும் உயரன்பாம்
பாதை கொடுத்தார் இங்கினிய
        பாரீச் பார்த்த சாரதியார்!

புத்தன் யேசு காந்திமகான்
        பொழிந்த அன்பு நெறியினிலே
சித்தம் களித்து வாழ்ந்திட்டால்
        சிறக்கும் இனிய புத்துலகு!
முத்தம் சிந்தும் மழலையிடம்
        முள்ளைக் கொடுத்து மகிழ்வாரோ?
அத்தா் படைத்த கவியாவும்
        அன்பின் ஆழம் காட்டியதே!

பூக்கள் பறிக்கக் கொடும்வாளா?
        புனிதர் நெஞ்சுள் மதவெறியா?
பாக்கள் தொடுத்துக் கேள்விகளைப்
        படைத்த பார்த்த சாரதியார்!
ஈக்கள் போன்று நாங்களெலாம்
        இனிக்கும் இவர்தம்  பாட்டின்மேல்
நோக்கம் கொண்டு அமர்ந்திட்டோம்!
        நுகர்ந்து தேனைக் குடித்திட்டோம்!

கம்பன் காட்டும் சீர்ராமன்
        கைகள் பாய்ச்சும் அம்பெனவே
நம்முன் இந்தச் செயராமர்
        நல்ல கவிதை அம்பெய்தார்!
நம்மின் நெஞ்சைத் தாக்கியது!
        நாட்டின் நிலையைக் காட்டியது!
அம்மா! எங்கள் தமிழ்வாணி
        அருள்வாய்! அருள்வாய்! ஒற்றுமையே!

ஆணும் பெண்ணும் என்றுலகில்
        அமைந்த சாதி இரண்டாகும்!
வேணும் என்றே கொடியவர்கள்
        விளைத்த சாதி பலவாகும்!
ஏனோ உறக்கம் தமிழர்களே?
        இன்றே எழுவீர் படைதிரண்டு!
வீணோர் படைத்த சாதிகளை
        விரட்டி அடிப்பீர் இங்குயர்ந்து!

புனிதம் உலகில் மறைந்ததுவே!
        பொய்யே எங்கும் நிறைந்ததுவே!
மனிதம் மாண்டு போனதுவே!
        மகுடம் மிருகம் பெற்றதுவே!
கணிதம் போட்டு வாழ்வுதனைக்
        காட்டிச் சென்றார் திருமதியார்!
இனியும் மாந்தர் பொதுநிலையை
        ஏற்க மறந்தால் அழிவாரே!

காதல் மழையைப் பொழிந்திட்டார் 
        களித்து நாமும் நனைந்திட்டோம்!
காதல் காதல் காதலெனஇ
        காதல் போயின் சாதலெனஇ
வேதம் படைத்தான் பாரதியே!
        வியக்கம் அவன்தன் சிந்தனையை
ஓதும் நாளே புத்துலகாம்!
        உணர்வீர் என்றன் தமிழர்களே!

என்னைப் பாட வைத்ததுவே
        இங்குப் புதுமை  என்றாயே!
கண்ணைக் காக்கும் இமைபோலக்
        கன்னல் தமிழைக் காத்தனையே!
என்னைப் பொறுத்த வரையினிலே
        இன்பத் திருநாள் இந்நாளே!
பொன்னை நிகர்த்த அலன்நண்பா!
        பொழிந்தேன் நன்றி ஏற்றருளே!

புதிய உலகைப் படைத்திடவே
        பொங்கி எழுக என்தோழா!
விதியை நம்பி வீழாமல்
        விரைந்தே எழுக என்தோழா!
வதியும் மக்கள் வாழ்வோங்க
        வளத்தை இடுக என்தோழா!
பதியும் வண்ணம் அப்பாவு
        பாக்கள் படைத்தார் வாழியவே!

இன்று இருப்பார் நாளையிலை!
        என்று பகர்ந்த இந்திரனே!
நின்று கொடுமை செய்பவர்கள்
        நிலத்தில் அழிவார் என்றனையே!
வென்று வாழ்வில் இனிமையுற
        விதைப்பீர் அன்பின் விதைகளையே!
நன்றாய்க் கவிதை படைத்தவுயர்
        நண்பா! நன்றி ஏற்பாயே!

மலரும் கவிதை யரங்குதனை
        மகிழும் வண்ணம் அமைத்தவரும்
பொலியும் வண்ணம் கவிதீட்டிப்
        புதிய உலகைப் படைத்தவரும்
குளிரும் இந்த மாலையிலே
        கொஞ்சும் தமிழைச் சுவைத்தவரும்
குலவும் என்றன் நன்றியினைக்
        கொடுத்து நிறைவு செய்கின்றேன்!

(01-12-2002 அன்று சேர்சி-பொந்துவாசு  பிரஞ்சு-இந்தியச் சங்கம் நடத்திய விழாவில் பாடியவை)

vendredi 5 septembre 2014

புத்துலகு - பகுதி 2



புத்துலகைப் படைத்திடுவோம்!

சீருடைய செந்தமிழில் கவிதை தீட்டிச்
           சிறப்புடைய புத்துலகைப் பாட வந்தார்
பேருடைய நற்கவிஞர் நால்வர்! பாடும்
           பீடுடைய கருத்தெல்லாம் இனிக்கும் ஐயா!
கூருடைய அம்பெனவே பாய, நெஞ்சுள்
           கொளுவுடைய மடமையெலாம் மடிய இங்கே
யாருடைய சிந்தனைகள் தீயை மூட்டும்
           அன்னவரின் வரலாற்றை உலகம் போற்றும்!

பாலைவனம் போல்கிடக்கும் நெஞ்சம் தன்னைப்
           பசுமையுறச் செய்கின்ற மருந்தும் யாது?
சோலையெனச் சாலையெலாம் பூத்தே ஆடச்
           சுடரொளியைத் தந்தருளும் பொருளும் யாது?
நாளைவரும் புத்துலகில் இன்பம் பொங்க
           நாம்கொடுக்கும் நல்லதொரு நெறியும் யாது?
பாளைதரும் மதுநிகர்த்த அன்பே யாகும்!
           பண்பருளும் அன்பமுதைப் பருகி வாழ்வோம்!

பொல்லாத பூகம்பம் வடக்கே வந்தால்
           புதுவையிலே இடம்மாறும் காணிக் கற்கள்!
தள்ளாத வயதினிலும் வழக்கு மன்றில்
           தப்பான வழக்குகளைத் தொடுப்பார் காணீர்!
எல்லோரும் இன்புற்று வாழ வேண்டின்
           எழில்கொஞ்சும் ஒற்றுமையை ஏற்பீர் ஐயா!
நல்லோரே! நற்றமிழ்நாட் டோரே! இன்ப
           நலங்கொழிக்கும் புத்துலகைப் படைப்போம் வாரீர்!

தானுயர்ந்து மற்றவரை அழுத்தி வாழும்
           சதிகாரர் படைத்ததுவே கொடிய சாதி!
நானுயர்ந்தோன்! நீ..தாழ்ந்தோன்! என்றே கூறி
           நமையழித்த சாதிகளை வளர்த்து விட்டீர்!
வானுயர்ந்த புத்துலகைப் படைக்க வேண்டின்
           மண்மூடி மறையட்டும் சாதிப் பேய்கள்!
கூன்விழுந்த மடமையெலாம் ஒழிய, நன்மை
           கொண்டொளிரும் பொதுவுடைமை பூக்கச் செய்வீர்!

மனம்கெடுக்கும் பழமூடப் பழக்கம் நீங்க,
           மதம்கொடுக்கும் மதம்பிடித்த புன்மை தீர,
தினம்கொழிக்கும் சாதிவெறி முற்றும் ஓட,
           திறம்அழிக்கும் தாழ்வென்னும் கீழ்மை மாய,
வனங்கமழும் தென்றலெனக் காதல் வீசும்!
           மண்ணுலகைப் பொன்னுலகாய் மாறச் செய்யும்!
மணங்கமழும் புத்துலகைப் படைக்க வேண்டின்
           மனம்இணைக்கும் காதல்மலர் பூத்தல் நன்றாம்!

அன்பு மலரட்டும்

தன்பிள்ளை, தன்மனைவி என்றே அன்பைத்
           தானடக்கிச் சிறையிட்டு வாழும் நெஞ்சே!
என்சொல்லை இவ்வரங்கில் சற்றே கேளாய்!
           எல்லைபல கடந்துன்றன் அன்பை வீசு!
இன்முல்லைக் காடாக வாழ்க்கை பூக்கும்!
           இன்பமொளிர் புத்துலகை அன்பே ஆக்கும்!
பொனில்லை! பொருளில்லை என்ற போதும்
           பொழிகின்ற அன்புமழை உன்னைக் காக்கும்!

அன்பாம் அமுதை அளிக்க வருகிறார்
பண்பின் செல்வர் பார்த்த சாரதி!
நல்ல நண்பர்! நற்றமிழ் அன்பர்!
வல்ல தமிழை வழங்கும் நெஞ்சர்!
இன்றைய இதழ்களில் இவரின் படைப்புகள்
நன்றாய் மின்னும்! நம்மை மயக்கும்!
பாக்கி யாவிற்கு இவரின் கவிதைகள்
இராக்கெட் வேகத்தில் செல்லும்! இராணி
இவரை இராசாவாய் ஏற்று மகிழ்ந்தாள்!
எவர்தாம் இவருக்கு இணையாய் நிற்பர்?
பார்த்த சாரதி! பைந்தமிழ்ச் சாரதி!
ஆர்த்து எழுகவே! அன்பைப் பொழிகவே!

ஒற்றுமை ஓங்கட்டும்

சுற்றிவரும் உலகத்தை உடைய வண்ணம்
           உயிர்காக்கம் ஒற்றுமையே! தமிழர் உன்..கை
பற்றிவரும் நாள்என்றோ? வரப்புச் சண்டை!
           பாய்ந்தோடும் நீருக்குக் கத்தி குத்து!
சுற்றியுள அமைப்புகளிள் தலைவர் மோதல்!
           துலங்கிடுமோ நற்றமிழர் வாழ்வு? நெஞ்சுள்
முற்றிவரும் சிந்தனையைக் கவிதை யாக்கி
           முழங்கிடுவார் பலராமன்! இனிதே கேட்போம்!

நற்பல ராமனே! நற்செயல் இராமனே!
வளமார் தமிழை வழங்கும் இராமனே!
பகையை வெல்லும் வகையை அறிந்து
போற்றும் தொண்டை ஆற்றும் இராமனே!
என்னுள் இருக்கும் இனிய இராமனே!
உன்னுள் இருக்கும் உணர்வை இங்குத்
துணிவுடன் பாடத் துள்ளி வருகவே!
அணியுடன் தமிழை அள்ளித் தருகவே!

பலராம பெருந்தகையே! - தருக
பசுந்தமிழ்க் கனிச்சுவையே!

சாதிகள் ஒழியட்டும்

கூர்ஈட்டி, மின்னும்வாள், உயிரைப் போக்கும்
           குண்டு,தடி, வல்லிரும்பும. இவைகள் யாவும்
பேரிட்டி நிற்கின்ற சாதி முன்னே
           பின்முதுகு காட்டுமடா! சாதிப் பேயால்
மார்காட்டி இறந்தவர்கள் கோடி! பொல்லா
           மடமையிருள் நீங்கிடவே வேண்டும் என்று
பா..கூட்டிப் படைத்திடவே வந்தார்! நல்ல
           பண்புடைய திருமதிநற் சீமோன் இங்கே!

அருமதி படைத்த திருமதி சீமோன்
தருமதி யாவும் தமிழ்மதி யன்றோ!
நன்றே பேசும் நற்றமிழ்ப் புலமை
என்றும் இவர்பால் இருக்கக் கண்டேன்!
பெருமை பலவும் பேறெனப் பெற்றே
அருமைத் தொண்டை அளிக்கக் கண்டேன்!
சாதிப் பேயை மோதி மிதித்துச்
சோதி உலகைச் சூட்டுக இனிதே!

திருமதி சீமோன் வருகவே - உம்
தீந்தமிழ்ப் பாக்களைத் தருகவே!

காதல் கமழட்டும்

விண்கதிரும், வெண்மதியும், வீசும் காற்றும்
           வியனுலகைக் காப்பதுபோல், அன்பே மின்னும்
நன்மதியால் பூத்தவுயர் காதல் என்றும்
           நலங்கொடுத்து வாழ்வுதனைக் காக்கும்! இங்குத்
துன்மதியால் துயர்கூடும் செயலைப் போக்கும்!
           சுரக்கின்ற தேனூற்றாம்! கரும்பின் சாறாம்!
பொன்தமிழில் சொல்லெடுத்துக் காதல் பாக்கள்
           பொழிந்திடுவார் நடராசன்! உண்போம் நாமே!

காதல் மணத்தால் கமழ்ந்து வாழும்
காதல் நெஞ்சர்! கன்னித் தமிழ்மேல்
காதல் கொண்ட கவிதைப் பித்தர்!
மோதும் விழிகளின் தூதை அறிந்தவர்!
நம்மின் தமிழை நன்றே காக்கும்
கம்பன் கழகக் கடமை வீரர்!
காதல் கமழ ஒளிரும் உலகை
ஓத வருகவே! உயர்தமிழ் தருகவே!

தில்லைக் கூத்தனே நடராசா! - தமிழ்ச்
சொல்லை முத்தெனத் தொடு..ராசா
நடராசா.. தமிழ்ப்பாட்டில் நட...ராசா!

இன்பக் கவிதைக் கூடத்தில்
           இனிதே பயிலும் பிள்ளையிவர்!
துன்பந் தந்த நபர்களையே
           துரத்தி ஓட்டும் வீரரிவர்!
அன்பே இவரின் இருப்பாகும்!
           அழகுத் தமிழே விருப்பாகும்!
நன்றே செய்யும் நண்பர்அலன்
           நலமாய்ப் புதுமைக் கவிதருவார்!

அலன் வருகவே! - இன்ப
அருந்தமிழ் தருகவே!

அருமைத் தமிழின் சீர்பாட
           அரங்கில் வந்தார் அப்பாவு!
பெருமை யாவும் இவர்கவியின்
           பிடியில் இருந்து தப்பாது!
உரிமை யோடு செந்தமிழர்
           உயர்ந்து வாழ்தல் எப்போது?
அரிய கருத்தை மழையாக
           அளிப்பார் நண்பர் இப்போது!

அப்பாவு வருகவே - கவிதைச்
சாப்பாடு தருகவே!

அடுத்துப் பாட அழைக்கின்றேன்
           அன்பர் இராச இந்திரனை!
எடுத்துக் கொடுக்கும் கருத்தெல்லாம்
           இனிக்கும் தேனே! நண்பரிவர்
படுத்துத் தூங்கும் பொழுதினிலும்
           படரும் கனவில் தமிழொளிரும்!
தொடுத்துக் கவிதை அளித்திடவே
           துள்ளி வருக மேடையிலே!

இராசேந்திர நண்பா! - தருகவே
வாசம் ஏந்தும் நற்...பா!

தொடரும்