jeudi 22 octobre 2015

கலைமகள் வெண்பா!




கலைமகள் வெண்பா!

1.
வெண்டா மரைமணக்க வீற்றிருக்கும் என்தாயே!
வண்டாய்ப் பறந்து வருகின்றேன்! - கண்டாய்க்
கவிபடைக்கச் செய்வாய்! கமழ்குறள் ஏந்திப்
புவிபடைக்கச் செய்வாய் பொலிந்து!

2.
கலைகள் அனைத்தையும் கற்பிக்கும் தாயே!
அலைகள் எனத்தொடரும் ஆற்றல் - நிலையாக்கிப்
பொல்லா உலகைப் புரட்டும் எழுத்துாட்டி
எல்லாம் அளிப்பாய் எனக்கு!

3.
இன்னிசை மீட்டும் இதயத்துள் வாழ்பவளே!
என்னசை சீரினிக்க நீ..எழுவாய்! - மின்விசைபோல்
இந்த உலகின் இருளகற்ற என்னாவில்
தந்து மகிழ்வாய் தமிழ்!

4.
கண்ணுள் கமழும் கலைப்பேறே! என்தாயே!
பண்ணுள் படரும் பசுந்தேனே! - எண்ணும்
எழுத்தும் உலகெல்லாம் ஏந்தவழி செய்வாய்!
பழுத்துன் அருளைப் படைத்து!

5.
கற்றோர் உளத்துள் களிக்கின்ற கற்பகமே!
சொற்போர் அவையில் துணையிருப்பாய்! - மற்போர்
வலிமை வழங்கிடுவாய்! வையம் செழிக்கப்
புலமை வழங்கிடுவாய் பூத்து!

6.
வீணை இசைப்பவளே! வெல்லும் மறவனென்
நாணை இழுப்பவளே! நற்றாயே! - ஆணையொன்று
இட்டருள்வாய் எல்லாரும் இவ்வுலகில் ஒன்றென்றே!
தொட்டருள்வாய் ஞானச் சுடர்!

7.
துாய்மை நிறத்தவளே! தொண்டன்என் சொல்லுக்குள்
வாய்மை நிலைக்க வரம்தருவாய்! - தாய்மையொளிர்
அன்பமு துாட்டி அணிசெய்வாய்! இப்புவியை
இன்னமு துாட்டி இயக்கு!

8.
எண்ணுள் எழுத்துள் இருந்து மணப்பவளே!
மண்ணுள் உளமடம் மாய்த்திடுவாய்! - வண்ணப்
பிரிவுகளைப் போக்கிடுவாய்! பீடுடைய சீரின்
விரிவுகளை ஆக்கிடுவாய் வென்று!

9.
பச்சைப் பசுங்கொடியே! பண்பரசி உன்னருளால்
அச்சம் அனைத்தும் அகன்றதுவே! - மிச்சமிலா
வண்ணம் அறிவை வழித்துாட்டு! மண்ணோங்கும்
எண்ணம் எனக்குள் இணைத்து!

10.
கல்விக் கடலே! கலைமகளே! சொற்பொருளைச்
சொல்லித் தருகின்ற சுந்தரியே! - மல்லிகையாய்ப்
பார்மணக்கச் செய்வாய்! பணிகின்றேன்! பாட்டரசின்
சீர்மணக்கச் செய்வாய் செழித்து!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
22.10.2015

mercredi 7 octobre 2015

கம்பன் விழா 2015


உலகத் தொல்காப்பிய மன்றம்

உலகத் தொல்காப்பிய மன்றம்
திறப்பு விழாப் புகைப்படங்கள்
பிரான்சு
27.10.2015