vendredi 23 décembre 2016

பாட்டரங்கம்

பிரான்சு கம்பன் விழாப் பாட்டரங்கம்
தலைமைக் கவிதை
  
தலைப்பு
கம்பனைக் கண்டு கதைக்கின்றார்கள்
[கூனி, வாலி, சூர்ப்பணகை, இராவணன்]
  
தமிழ்த்தாய் வணக்கம்!
  
சந்தங்கள் பலகோடி வந்தாடும் தமிழே..என்
தலைமீது குடியேடி வாழ்க!
தங்கத்து நிகராகத் தந்தான கவிபாடத்
தழைத்தோங்கும் அணியாவும் சூழ்க!

சிந்தோங்கப் பலகோடி சேர்ந்தாடும் தமிழே..என்
சிந்தைக்குள் குடியேறி வாழ்க!
சிங்கத்துக் குரலாகச் செம்மாந்து நான்பாடச்
சீருக்குள் செழிப்பேந்தி ஆழ்க!
முந்தும்சீர் பலகோடி மொழிகின்ற தமிழே..என்
மூளைக்குள் குடியேறி வாழ்க!
மூவாத அமுதுாறும் தேவார தமிழே..என்
மூச்சுக்குள் பண்பாடி ஆள்க!
சொந்தங்கள் பலகோடி தந்தாடும் தமிழே..என்
சொல்லுக்குள் குடியேறி வாழ்க!
தொட்டுன்னைத் தொழுகின்றேன் விட்டேன்றும் பிரியாமல்
தொடர்கின்ற பிறப்பெல்லாம் காக்க!
  
இறை வணக்கம்!
  
வில்லேந்தும் திருராமா! வியன்சீதை மணவாளா!
வெல்கங்கைக் குகனுக்கு நண்பா!
விண்ணேந்தும் ஒளியானாய் மண்ணேந்தும் வலமானய்!
வெண்பஞ்சு நெஞ்சுற்ற அன்பா!
மல்லேந்தும் வன்..கையா! மாண்பேந்தும் பொற்கையா!
மலைமீது வாழ்கின்ற ஐயா!
மனம்வாழும் மதுசூதா! மறைவாழும் மகிழ்வேதா!
மணம்வீசும் உன்னெண்ணம் நெய்யா!
சொல்லேந்தும் என்பாடல் சுவையேந்த நீ செய்தால்
சுடர்ந்தோங்கும் என்வாழ்வு மெய்யா!
தொல்பாவை எழின்மார்பா! பல்லாண்டு நான்பாடித்
தொடர்கின்ற பாட்டுக்குள் நீ..வா!
கல்லேந்தும் நெஞ்சத்தைக் கரைக்கின்ற வண்ணத்தில்
கமழ்கின்ற தமிழ்தந்து காப்பாய்!
கனியேந்தும் சுவைதந்து பனியேந்தும் குளிர்தந்து
கவிமன்றல் புகழள்ளிக் சேர்ப்பாய்!
  
அவையோர் வணக்கம்!
  
மின்னஞ்சல் முகநுாலின் மேலாசை கொள்ளாமல்
இன்பாட்டு அரங்கிற்கு வந்தீர்!
மின்விஞ்சும் விழியேந்திப் பொன்விஞ்சும் நகையேந்திப்
பண்கேட்க அமர்ந்துள்ள பெண்டீர்!
இன்தஞ்சை மொழியேந்தி எழிற்கூட்டி மலர்சூட்டி
இளம்பச்சைக் கிளியாக வந்தீர்!
இசைபாடும் இனியோரே! ஈடில்லா இளையோரே!
கவிகேட்க பேருள்ளம் கொண்டீர்!
வன்னெஞ்சம் கொண்டுள்ள வரலாற்று நபா்நாடி
வாயாட வந்துள்ள அன்பீர்!
புண்ணெஞ்ச நோய்தீரப் பூக்கொண்ட சொல்லேந்திப்
புகழ்கம்பன் சீர்பாடும் தொண்டீர்!
என்னெஞ்சம் வணக்கங்கள்! இருகைகள் தாம்சேர்த்து
இன்னோசை முழக்கத்தைக் கொட்டீர்!
நன்னஞ்சை நிலமாக இன்பாக்கள் விளைந்தாடும்
இம்மன்றை எந்நாளும் வாழ்த்தீர்!
  
தொடரும்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்

Aucun commentaire:

Enregistrer un commentaire