samedi 28 octobre 2017

வெளிவிருத்தம்

வெண்பா மேடை - 46
  
வெளிவிருத்தம்!
  
மூன்றடியால் வரும், அல்லது நான்கடியால் வரும்.
  
ஒவ்வோரரடியின் ஈற்றிலும் ஒரே சொல் வரும். தனிக்கோடு பெறும்.
  
மூன்றடிகள் பெற்று நடக்கும் வெளிவிருத்தத்தைச் சிந்தியல் வெண்பாவின் இனமாகவும், நான்கடிகளைப் பெற்று நடக்கும் வெளிவிருத்தத்தை அளவியல் வெண்பாவின் இனமாகவும் கொள்ளலாம்.
  
பொருள் முற்றாத அடிகளைக் கொண்ட பாவை நிலைவெளிவிருத்தம் என்றும், பொருள் முற்றிய அடிகளைக் கொண்ட பாவை மண்டில வெளிவிருத்தம் என்றும் வேறுபடுத்திக் கூறுவர்.
  
வெண்டளையில் அமைந்த வெளிவிருத்தம் உண்டு [ தனிச்சொல் முன் வெண்டளை இல்லாமலும் வரலாம்]
  
வெளிவிருத்தத்தில் எல்லாச் சீர்களும், தளைகளும் வரலாம்.
  
வெளிவிருத்தச் செய்யுளின் நான்கடிகளும் ஒரே எதுகை பெற்றுவருவது சிறப்புடைத்து. முதலிரண்டடிகள் ஓரெதுகையாகவும். பின்னிரண்டடிகள் ஓரெதுகையாகவும் நிற்றலுமுண்டு. [அடியளவும், சீரின் தன்மையும் ஒத்ததாய் இருக்க வேண்டும்]
  
அதாவது, வெளிவிருத்ததின் முதலடி சிந்தடியாயின் மற்ற அடிகளும் சிந்தடியாகவும், முதலடி அளவடியாயின் மற்ற அடிகளும் அளவடியாகவும், முதலடி நெடிலடியாயின் மற்ற அடிகளும் நெடிலடியாகவும், முதலடி கழிநெடிலடியாயின் மற்ற அடிகளும் கழிநெடிலடியாகவும் அமைந்திருக்க வேண்டும்.
  
செய்யுளின் முதலடியின் மாச்சீர் நின்றவிடத்தில் மற்ற அடிகளிலும் மாச்சீரும், விளச்சீர் நின்றவிடத்தில் விளச்சீரும், காய் நின்றவிடத்தில் காய்ச்சீரும். கனி நின்றவிடத்தில் கனிச்சீரும் நிற்க வேண்டும்.
  
நான்கடி மண்டில வெளிவிருத்தம்

பித்தம் பெருகுதடி! பெருந்தொல்லை புரியுதடி! - செல்லம்மா!
முத்தம் கேட்குதடி! முகத்தழகு வாட்டுதடி! - செல்லம்மா!
நித்தம் ஏங்குதடி! நெஞ்சுருகிப் பொங்குதடி! - செல்லம்மா!
சித்தம் இரங்காயோ? செந்தேனை அருளாயோ? - செல்லம்மா!
  
நான்கடி நிலைவெளிவிருத்தம்
துாங்கும் பொழுதினிலும் சுடர்கின்ற முழுநிலவாய்ச் - செல்லம்மா!
ஏங்கும் கனவுகளை எப்பொழுதும் எனக்கிட்டுச் - செல்லம்மா!
தேங்கும் உணர்வுகளைச் சிந்தாடும் நினைவுகளைச் - செல்லம்மா!
தாங்கும் நிலையின்றித் தவிக்கின்றேன்! அணைத்திடுவாய் - செல்லம்மா!
  
நான்கடி வெண்டளை வெளிவிருத்தம்!
மீனாடும் கண்ணழகில் நானாடி நிற்கின்றேன் - செல்லம்மா!
தேனுாறும் சொல்லழகில் சீரூறிச் சொக்குகிறேன் - செல்லம்மா!
வானுாரும் மேகமென வந்துாறும் கற்பனைகள் - செல்லம்மா!
ஊனுாறும் என்னாசை உன்னுறவை வேண்டுதடி - செல்லம்மா!
  
நான்கடியால் வந்து அடியோறும் பொருள் முற்றுப்பெறும் மண்டில வெளிவிருத்தம் ஒன்று விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
28.10.2017

Aucun commentaire:

Enregistrer un commentaire