jeudi 21 décembre 2017

நான்காரைச் சக்கரம் - 3



சித்திர கவிதை
நான்காரைச் சக்கரம் - 3

இது நான்கு ஆராய், நடுவே 'மே' என்னும் எழுத்து நிற்க, ஒவ்வொரு ஆரையின் மேலும் மூன்று எழுத்துகள் நிற்க, சுற்று வட்டத்தில் இருபத்தெட்டேழுத்துகள் பொருந்தப் பாடப்படும் கவியாகும்.

அறுபத்து நான்கு எழுத்துகளை உடைய இச்செய்யுள், நான்காரைச் சக்கரத்தில் அமைக்குங்கால் நாற்பத்தோர் எழுத்துகளாகச் சுருங்கும்.

சந்த அறுசீர் விருத்தம்

மேடு நாடு கூட்டும் கண்ணா! நாவு பாடுமே!
மேடு பாவு நாட்டும் கண்ணா! தேனு கூடுமே!
மேடு கூனு தேற்றும் கண்ணா! தாரு சூடுமே!
மேடு சூரு தாக்கும் கண்ணா கூடு நாடுமே!

செய்யுளுரை

கண்ணா! மேன்மையுடைய உன் நாட்டினை எனக்குக் கூட்டுவாய். உன்னாட்டினை என்..நாப் புகழ்ந்து பாடி மகிழும்.  

கண்ணா! உலகம் போற்றும் உயர்ந்த பாடல்களை எனக்கு அளிப்பாய். நீ அளிக்கும் பாடல்களில் கன்னல் ஊறி என்றென்றும் இனிக்கும்.  

கண்ணா! பாவச் சுமையால் மிக வளைந்துள்ள என்னுயிரைக் குணப்படுத்துவாய். மணக்கின்ற மாலையை என்னெஞ்சம் சூடிக் களிக்கும்.

கண்ணா! மிகவும் கூடியுள்ள என்மன அச்சத்தை நீக்குவாய். எப்பிறப்பிலும் என்னுயிர்க்கூடு உன்னையே நாடி வரும். 

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
18.12.2017

Aucun commentaire:

Enregistrer un commentaire