jeudi 28 décembre 2017

வெண்பா மேடை - 54

வெண்பா மேடை - 54
  
குறள் வெண்செந்துறை
[கழிநெடிலடி]
  
அளவில் ஒத்த இரண்டு அடிகளாய் ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் கொண்டு வருவது குறள் வெண்செந்துறை எனப்படும். [குறள் வெண் செந்துறையின் இலக்கணத்தை வெண்பா மேடை - 53 ல் காண்க]
  
கழிநெடிலடியால் வந்த குறள் வெண்செந்துறை
  
1.
அறிவூறும் நுால்கள்பல கற்றாலும்
   அணிப்புகழைத் தலைசூடி நின்றாலும்
நெறியூறும் நுால்கள்பல நெய்தாலும்
   நெஞ்சேங்கச் சிறந்ததுவாம் நல்லொழுக்கம்!
  
2.
முட்டுகின்ற ஊழென்று அயர்தலிலும்
   மூளுகின்ற துயரென்று ஒழிதலிலும்
தட்டுகின்ற தடையென்று ஓய்தலிலும்
   தமிழ்போன்று சிறந்ததுவாம் நல்லுாக்கம்!
  
3.
கோடிச் செல்வத்தைக் கொடுத்திங்குக்
   கும்பிட்டு அருணாடி வாழ்தலிலும்
தேடி யலைந்துமனம் திரிதலிலும்
   தேன்போல் சிறந்ததுவாம் அறனுடைமை!
  
4.
பல்பொருள் தேடிப் படர்வதிலும்
   பயன்பொருள் தந்து தொடர்வதிலும்
வெல்பொருள் நாடி விரைவதிலும்
   சிறந்ததுவாம் வாழ்வில் அன்புடைமை!
  
5.
வாரி வழங்கும் வண்மையிலும்
   மனத்தை அடக்கும் தன்மையிலும்
மாரி வழங்கும் நன்மையிலும்
   மண்ணில் சிறந்தது கொல்லாமை!
  
6.
இறைவன் சீரை உரைத்தலிலும்
   இடுநீர் மண்ணைத் தரித்தலிலும்
மறையோன் மாலை அணிதலிலும்
   வாழ்வில் சிறந்தது மனத்துாய்மை!
  
7.
ஆளும் செல்வம் குவித்தலிலும்
   அருளின் செல்வம் அடைதலிலும்
தாளும் மணக்க எழுதலிலும்
   தன்னுள் சிறந்தது பண்புடைமை!
  
8.
காடென்று மலையென்று குகையென்று
   கண்மூடி ஞானத்தைக் தேடலிலும்
பீடென்று முனியாக வாழ்தலிலும்
   பிறப்பிற்குச் சிறந்ததுவாம் இல்லறமே!
  
9.
கோயில் நலமென்று சுற்றலிலும்
   குளமே வளமென்று குளித்தளிலும்
தாயின் திருத்தாளைத் தொழுதேத்திச்
   சாற்றுவது சிறந்ததுவாம் நன்குணர்க!
  
10.
நன்மார்க்கம் இதுவென்று நாடலிலும்
   பொன்மார்க்கம் இதுவென்று பாடலிலும்
இன்மார்க்கம் இதுவென்று சூடலிலும்
   சன்மார்க்கம் சிறந்ததுவாம் நன்குணர்க!
  
கழிநெடிலடியால் வந்த குறள் வெண்செந்துறை ஒன்றை, விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்செந்துறையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
28.12.2017

1 commentaire:

  1. இதைப் படிக்கப் படிக்க எனக்கு குறள் (அன்பும் அறனும் உடைத்தாயின், கொல்லாமை, மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்று பல) ஞாபகம் வந்துபோகிறது. உங்கள் தளத்துக்கு அவ்வப்போது வந்து படித்து இன்புறுகிறேன்.

    குளித்தளிலும் - இதில் தட்டச்சுப் பிழை குளித்தலிலும்

    RépondreSupprimer