dimanche 11 mars 2018

ஆசிரியப்பா மேடை - 1


ஆசிரியப்பா மேடை - 1
  
தமிழில் இன்று வழங்கி வரும் பாக்கள் நான்கு. 1. ஆசிரியப்பா, 2, வஞ்சிப்பா, 3. கலிப்பா, வெண்பா.
  
ஆசிரியப்பா நான்கு வகைப்படும். 1. நிலைமண்டில ஆசிரியப்பா, 2. நேரிசை ஆசிரியப்பா, 3. இணைக்குறள் ஆசிரியப்பா, 4. அடிமறி மண்டில ஆசிரியப்பா.
  
வஞ்சிப்பா இரண்டு வகைப்படும். 1. குறளடி வஞ்சிப்பா, 2. சிந்தடி வஞ்சிப்பா.
  
கலிப்பா நான்கு வகைப்படும். 1. ஒத்தாழிசைக் கலிப்பா. 2. கலிவெண்பாட்டு, 3. கொச்சகக் கலிப்பா, 4. உறழ்கலிப்பா.
  
ஒத்தாழிசைக் கலிப்பா மூன்று வகைப்படும். 1.நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, 2. அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, 3. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா.
  
கலிவெண்பாட்டு இரண்டு வகைப்படும். 1 வெண்கலிப்பா, 2. கலிவெண்பா.
  
கொச்சகக் கலிப்பா ஐந்து வகைப்படும். 1. தரவு கொச்சகக் கலிப்பா, 2. தரவிணைக் கொச்சகக் கலிப்பா, 3. சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, 4. பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, 5. மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா,
  
உறழ்கலிப்பா இன்று வழக்கில் இல்லை.
  
வெண்பா நான்கு வகைப்படும். 1. குறள் வெண்பா. 2. சிந்தியல் வெண்பா, 3. அளவியல் வெண்பா, 4. பஃறொடை வெண்பா.
  
மருட்பா என்ற வகை முன்னே இருந்தது. இன்று வழக்கில் இல்லை. அது நான்கு வகைப்படும். 1. புறநிலை வாழ்த்து மருட்பா, 2. வாயுறை வாழ்த்து மருட்பா, 3. செவியறிவுறுாஉ மருட்பா, 4. கைக்கிளை மருட்பா.
  
ஆசிரியப்பாவின் விளக்கம்
  
ஆசிரியப்பாவை அகவல் என்றும் சொல்லப்படும். இதுவே முதலில் தோன்றிய பாவென்று யாப்பறிஞர் உரைப்பார். சங்க காலத்தில் இந்தப் பாவினமே அதிகமாகப் பாடப்பட்டது. அகநானுாறு, புறநானுாறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநுாறு, பதிற்றுப்பத்து, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை, மலைபடுகடாம், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை முதலிய பழந்தமிழ் நுால்களெல்லாம் ஆசிரியப்பாவால் ஆனவையாகும்.
  
சீரினானும் பொருளினானும் ஓசையினானும் ஆகிய நுண்மையைத் தன்கண் கொண்டு நிகழ்வதாலும், புறநிலை வாழ்த்து முதலாகிய பொருள்களை ஆசிரியனே போல நின்று அறிவிக்கும் ஆகலானும் ஆசிரியம் என்பது காரணக் குறியாகும். ஆசு எனினும் சிறிது எனினும், நுண்ணிது எனினும் ஒக்கும். இதனைப் பாடுதல் எளிமை நோக்கி 'மென்பா' என்பர். இஃது மயில்போல் அகவிக் கூறும் ஓசையுடையது. [இப்பாவை விரைவாக எழுதலாம். எனவே ஆசிரியப்பாவை அவசரப்பா என்றும் உரைப்பர்]
  
ஆசிரியப்பாவின் இலக்கணம்
  
ஈசைச்சீர்கள் நான்கும் வரும். [தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்]
  
அடிதோறும் நான்கு சீர்கள் பெற்று வரும்.
  
இரண்டடி ஓரெதுகைப் பெற்று வரும்.
  
ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை பெற்று வரும். [மூன்றில் அமையவில்லை யெனில் இரண்டாம் சீரில் அல்லது நான்காம் சீரில் மோனை அமையவேண்டும்]
  
மூன்றடிக்குக் குறையாமல் எத்தனை அடிகளிலும் வரலாம். [சிற்றெல்லை 3 அடி, பேரெல்லை அளவில்லை]
  
ஈற்றடியின் கடைசிச் சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு. [ஓ, ஈ, ஆய், என், ஐ எனவும் முடிவதுண்டு] நேரிசை ஆசிரியப்பா ஏகாரத்தில் மட்டுமே முடியும்.
  
மூவசைச் சீர்கள் அருகி வரும். [தேமாங்காய் புளிமாங்காய் வரலாம்] மற்ற இரு காய்கள் வராமல் இருப்பது நன்று.
  
கருவிளங்கனி, கூவிளங்கனி வரக்கூடாது [மற்ற இரு கனிகள் வராமல் இருப்பது நன்று]
  
அகவல் ஓசையைப் பெற்றிருக்க வேண்டும். [ஈரசைச் சீர்களைப் பயன்படுத்தி எழுதினால் அகவல் ஓசை சிறப்பாக அமையும்] நேரொன்றிய ஆசிரியத் தளையும், நிரையொன்றிய ஆசிரியத்தளையும், இயற்சீர் வெண்டளையும் விரவி வரும்.
  
நேரிசை ஆசிரியப்பா
  
அன்பும் பண்பும் அமைந்த வாழ்வில்
இன்பம் என்றும் இணைந்தே இருக்கும்!
பச்சைப் பசுமை படரும் வயல்போல்
இச்சை யாவும் எழிலே மேவும்!
உயிர்கள் யாவும் ஒன்றே என்ற
உயர்நெறி நெஞ்சுள் ஓங்கி ஒளிரும்!
வடலுார் வள்ளல் வகுத்த
படர்புகழ்ப் பாதை பாரில் வளர்கவே!
  
               [பாட்டரசர்]
    
ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தைப் பெற்று ஈற்று அயலடி முச்சீராய் வருவது நேரிசை ஆசிரியப்பா ஆகும். ஈற்றயலடியை, எருத்தடி என்று வழங்கப்படும். நேரிசை ஆசிரியப்பா ஏகாரத்தால் மட்டுமே முடியும்.
  
அன்பின் பெருமையை உணர்த்தும் வண்ணம் நேரிசை ஆசிரியப்பா ஒன்றை 12 அடிக்கு மிகாமல் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

இனிய காலை வணக்கம்!



இனிய காலை வணக்கம்!

திருவள்ளுவர் ஆண்டு 2049 ஞாயிற்றுக் கிழமை மாசி 28
11.03.2018

ஆழ்ந்த நெறியளிக்கும் அந்தமிழே! எந்நாளும்
சூழ்ந்த புகழளிக்கும் தொல்தமிழே! - வீழ்ந்திடச்
செய்யும் பகையடக்கச் செங்களம் செல்கின்றேன்!
உய்யும் திறம்தந்[து] உதவு!

பள்ளித் தலத்திலும் பாடும் களத்திலும்
துள்ளி எனக்குள் துடிப்பவளே! - தெள்ளமுதே!
பொல்லாப் பகைவரைப் போக்கிடச் செல்கின்றேன்!
எல்லாம் அளித்தெனை ஏந்து!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

samedi 10 mars 2018

வஞ்சித்துறை - 2




வஞ்சிப்பா மேடை - 2

வஞ்சித்துறை - 2
[மா + விளம்]

நீறு பூசினீர்
ஏற தேறினீர்!
கூறு மிழலையீர்
பேறும் அருளுமே!

[திருஞானசம்பந்தர் - 995]

தந்தையானவள்!

1.
அன்னை திருமொழி
என்னைக் காத்திடும்!
முன்னைப் பெரும்வினை
தன்னை நீக்கிடும்!

2.
அம்மா திருமுகம்
இம்மா நிலம்நிகர்!
சும்மா தொழுதிட
எம்மா நலமிடும்!

3.
காயும் மனமெழும்!
பாயும் துயரறும்!
தாயின் திருவடி!
மாயன் பொன்னடி!

4.
அன்பின் நிலமவள்!
இன்பின் விதையவள்!
பண்பின் மழையவள்!
நண்ணும் பயனவள்!

5.
மண்ணின் மணமவள்!
விண்ணின் கதிரவள்!
கண்ணின் ஒளியவள்!
பண்ணின் சுவையவள்!

6.
தந்தை யானவள்!
சிந்தை யானவள்!
விந்தை யானவள்!
முந்தை யானவள்!

7.
பணையாய் ஆர்த்தவள்!    
புணையாய்ப் பூத்தவள்!
அணையாய் நிற்பவள்!
துணையாய்க் காப்பவள்!

8.
உண்டைச் சோறினைத்
தொண்டை மறக்குமா?
தொண்டை நினைந்திடா
மண்டை சிறக்குமா?

9.
என்னை மனத்தினில்
என்றும் சுமப்பவள்!
பின்னை நலத்தினைப்
பின்னி அளிப்பவள்!

10.
அடுத்த பிறவியை
எடுத்துப் பிறந்துநான்
கொடுத்த நலங்களைத்
தொடுத்து மகிழுவேன்!

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

மா + விளம் என்ற வாய்பாட்டில் ஓரடி அமைய வேண்டும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெற்று வரவேண்டும். [ஓரடியில் இருசீர்கள் வருகின்ற காரணத்தால் மோனை கட்டாயமன்று]

ஆசான் சிறப்பினை உரைக்கும் வண்ணம் இவ்வகை வஞ்சித்துறை ஒன்றைப்   பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
    
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
08.03.2018

மகளிர் நன்னாள் வாழ்த்து

மகளிர் நன்னாள் வாழ்த்து
  
பெண்ணடிமை நீங்கிடவே முரசம் கொட்டிப்
   பெரும்புலவர் அருந்தமிழில் பாக்கள் செய்தார்!
மண்ணடிமை நீங்கியவர் மகளிர் தம்மை
   மனையடிமை ஆக்கிமனம் மகிழ்ந்தார்! நாற்றப்
புண்ணடிமை செயல்யாவும் புதைய வேண்டும்!
   பொலிவேந்திப் பூவையர்கள் வாழ வேண்டும்!
பண்ணடிமைப் பாட்டரசர் வாழ்த்து கின்றேன்!
   பார்முழுதும் பாவையர்கள் நலமே காண்க!
  
மங்கையராய்ப் பிறந்திடவே தவமே வேண்டும்!
   மணிக்கவியை மனங்கொண்டு பெண்மை போற்று!
தங்கையராய் உடன்பிறந்து குடும்பம் தன்னைத்
   தலைமீது சுமந்தவளின் தண்மை சாற்று!
இங்கயரா[து] உழைக்கின்ற பெண்கள் தாமே
   இல்லத்தின் முதுகொலும்பு! வாழ்வின் அச்சு!
செங்கதிராய்ச் சீர்நல்கும் தாய்மைப் பண்பு
   செழித்திடவே மண்ணுலகைக் காக்கும்! வாழ்த்து!
  
புதுவையிலே பிறந்திட்ட புரட்சி யாளன்!
   புகழ்த்தமிழின் பண்பாளன்! பாட்டின் வேந்தன்!
புதுமையிலே இவ்வுலகம் மலர வேண்டிப்
   பூவையரின் விடுதலைக்குப் போர்வாள் கொண்டான்!
வதுவையிலே ஆணுக்கோர் நீதி! பூத்த
   மலரான மாதுக்கோர் நீதி! இங்குப்
பொதுமையிலே எந்நெறியும் இயற்ற வேண்டும்!
   பொய்புரட்டுச் சடங்கெல்லாம் பொசுங்க வேண்டும்!
  
வீட்டுக்குள் செல்வியரைப் பூட்டி வைத்த
   விலாவெடித்து முகங்கிழித்து மடமை சாய்த்துப்
பாட்டுக்குள் விடுதலையைப் பாடி வென்ற
   பாரதியை வணங்குகிறேன்! பறவை போன்று
கூட்டுக்குள் வாழுவதோ? ஆண்மை ஆளும்
   குரலுக்குத் தாழுவதோ? மேன்மை யோங்க
நாட்டுக்குள் நங்கையரின் நன்மை காத்தால்
   ஏட்டுக்குள் நம்பெயரைக் காலம் தீட்டும்!
  
தன்மானத் தமிழ்அரிமா! அறிவின் செல்வர்!
   தள்ளாத அகவையிலும் தடியை ஊன்றி
நன்மானம் உரைத்திட்ட மறவர்! சூடு
   நரம்பேற, நாம்மாற உழைத்த மல்லர்!
பொன்வானக் கதிர்கொண்ட பெரியார்! ஆய்ந்து
   பொழுதெல்லாம் பெண்ணுரிமை வேண்டி நின்றார்!
துன்பான போக்கெல்லாம் துாள்துாள் ஆக
   இன்பான வழிபடைத்தார்! பெண்ணே வாழி!
  
பிறப்பொக்கும் நெறியுரைக்கும் குறளும், பெண்ணின்
   பெருந்தக்க சீருரைக்கும்! மேல்கீழ் எண்ணம்
இறப்பொக்கும் என்றிடுவேன்! பெண்மை போற்றல்
   இனிப்பொக்கும் என்றிடுவேன்! முன்னே காத்த
சிறப்பொக்கும் வாழ்வியலைச் சூடி வாழச்
   செந்தமிழின் குறள்நெறியை ஏற்பீர் நன்றே!
திறமொக்கும் வண்ணத்தில் மகளிர் சட்டம்
   திருத்தமுற இயற்றிடுவீர்! செழிக்கும் வாழ்வே!
  
மண்கலமும் சுமந்திடுவாள்! வானில் செல்லும்
   விண்கலமும் அமர்ந்திடுவாள்! முன்னை யாப்பின்
பண்கலமும் பயின்றிடுவாள்! பயிற்சி பெற்றுப்
   படைக்களமும் புகுந்திடுவாள்! குளிர்ச்சி நல்கும்
தண்கலமும் தமிழ்க்களமும் நெஞ்சம் ஏந்தித்
   தகைக்களமும் கண்டிடுவாள்! கணினிக் கல்வி
எண்கலமும் தேர்ந்திடுவாள்! அறிவால் ஓங்கும்
   நுண்கலமும் ஓர்ந்திடுவாள்! உலகே போற்று!
  
கொடியழகு வஞ்சியினைப் பெற்ற இல்லம்
   அடியழகுப் பாடல்போல் இனிக்கும் என்பேன்!
செடியழகு பூத்தொளிரும்! பெண்ணின் உள்ளம்
   செயலழகு காத்தொளிரும்! மேகம் கொண்ட
முடியழகு! முகமழகு! முல்லைப் பற்கள்
   முத்தழகு! மொழியழகு! அன்னம் போன்றே
அடியழகு! துடியழகு! அறமே மின்னும்
   அகமழகு! அணியழகு! பெண்மை வாழ்க!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
08.03.2018

mercredi 7 mars 2018

வஞ்சித்துறை - 1


வஞ்சிப்பா மேடை - 1
  
வஞ்சித்துறை - 1
  
இருசீர் அடிகள் இரண்டு ஓரெதுகை பெற்று வந்தால் பரணித் தாழிசை என்பர். இருசீர் அடிகள் நான்கு ஓரெதுகை பெற்று வந்தால் வஞ்சித்துறை என்பர்.
  
பரணித் தாழிசை இரண்டு அடிகளைப் பெற்ற காரணத்தால் குறளின் இனமாக வைக்கப்பட்டது.
  
ஓரடியில் இரண்டு சீர்கள் பெற்று நான்கடிகள் பெற்ற காரணத்தால் வஞ்சித்துறை குறளடி வஞ்சிப்பாவின் இனமாக வைக்கப்பட்டது.
  
வஞ்சித்துறையின் சீர் வாய்பாடுகளை எந்நுாலும் வரையறுத்துக் கூறவில்லை. முன்னை இலக்கியங்களில் உள்ள சான்றுகளைப் பார்த்து எழுத வேண்டும்.
  
வஞ்சித்துறை - 1
[தேமா + விளம்]
  
ஓற்றி ஊரனைப்
பற்றி நெஞ்சமே!
நிற்றி நீஅருள்
பெற்றி சேரவே!
  
         [திருவருட்பா - 1350]
  
வானோர் வழிபடு
கோனே குமரவுன்
தேனார் திருவடி
தானே தனிநிலை
  
         [பாம்பன் சுவாமிகள்]
  
1.
கண்ணைக் கைகளால்
புண்ணாய்ச் செய்வரோ?
பெண்ணை அடிமையாய்
மண்ணில் கொள்வதோ?
  
2.
கங்கை வளமென
எங்கும் எழில்வரும்!
மங்கை கற்றிடப்
பொங்கும் புகழ்வரும்!
  
3.
இல்லம் எழிலுறும்!
உள்ளம் உயர்வுறும்!
அல்லல் அகன்றிடும்
வல்ல மாதினால்!
  
4.
வாடும் கன்னியர்
ஏடும் பயின்றிட
நாடும் ஓங்கிடும்!
வீடும் ஓங்கிடும்!
  
5.
இளமைக் கண்களால்
உளம்..தை காணுமே!
புலமைப் பெண்களால்
வளமை சேருமே!
  
6.
காடும் கமழ்ந்திட,
பீடு்ம் பிணைந்திட,
பாடும் பாவையை
நாடும் பணியுமே!
  
7.
கோதை குளிர்விழி
போதைக் களிதரும்!
சீதை தரும்மொழி
பாதை ஒளிபெறும்!
  
8.
அன்பின் ஊற்றென,
தென்றல் காற்றென,
இன்பின் கூட்டென
என்றும் தாய்மனம்!
  
9.
முன்னை முகிழ்தவம்
பொன்னைப் பொழியுமே!
அன்னை அருண்மொழி
உன்னை உயர்த்துமே!
  
10.
உண்மை சூடுக!
வண்மை கூடுக!
திண்மை பூணுக!
பெண்மை பேணுக!
  
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
    
தேமா + விளம் என்ற வாய்பாட்டில் ஓரடி அமைய வேண்டும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெற்று வரவேண்டும். [ஓரடியில் இருசீர்கள் வருகின்ற காரணத்தால் மோனை கட்டாயமன்று]
  
தந்தையின் சிறப்பினை உரைக்கும் வண்ணம் இவ்வகை வஞ்சித்துறை ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
      
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
    
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
07.03.2018

mardi 6 mars 2018

வெண்பா மேடை - 63

வெண்பா மேடை - 63
  
பரணித் தாழிசை!
  
அளவொத்த இரண்டிகள் பயின்று வருவது பரணித் தாழிசையாகும். பரணி நுால்கள் இவ்வகைத் தாழிசைகளால் மட்டுமே பாடப்பட்டன. இத்தாழிசைகளில் இருக்கும் ஓசை நயம் படித்துச் சுவைக்கத்தக்கது. ஈரடியால் வரும் குறள் வெண்செந்துறை அறம் பற்றிப் பாடப்படும். பரணித் தாழிசை மறம் பற்றிப் பாடப்படும்.
  
பரணித் தாழிசை விருத்தத்தின் பாதியாய் இருக்கும். [ பரணித் தாழிசையை இரட்டித்து ஒரு விருத்தம் இயற்றலாம்] பரணி இலக்கியங்களில் இருசீர் முதல் பதினாறு சீர்வரை தாழிசைகள் வந்துள்ளன.
  
இருசீரடித் தாழிசை
  
1.
பற்று முற்றும்
வெற்றி கொட்டும்!
  
2.
இத்தரை இசைக்கும்
முத்தமிழ் மொழியே!
  
3.
பாட்டுப் பணியே
நாட்டும் நலமே!
  
4.
கொடியேந்திக் கூத்திடுக!
விடிவேந்தி வித்திடுக!
  
5.
வெள்ளையரை ஓட்டினோம்
கொள்ளையரைக் கூட்டினோம்!
  
6.
எங்கும்நலம் எழுதும்மொழி!
பொங்கும்புகழ் பொலியும்வழி!
  
4.
திங்கள்தரும் செம்மைக்கதிர்!
எங்கள்தமிழ் செம்மைப்பொழில்!
  
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இருசீரடிப் பரணித் தாழிசையில் எவ்வகைச் சீரும், தளையும் வரலாம். ஓசை நயம் இருத்தல் வேண்டும். ஈரடியும் ஓரெதுகை பெறவேண்டும். மோனை கட்டாயமில்லை. இயற்கையாக மோனை அமையுமெனில் நன்றாம்.
  
இருசீரடித் தாழிசை ஒன்றை, விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் குறட்டாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
06.03.2018

lundi 5 mars 2018

கேட்டலும் கிளத்தலும்



கேட்டலும் கிளத்தலும்

ஈட்டுபுகழ் - ஈட்டுப்புகழ், இங்கு வல்லினம் மிகுமா? மிகாதா? இலக்கண விளக்கத்துடன் விளக்கம் தரவும்.

பாவலர் இளமதி, சர்மனி

---------------------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

ஈட்டுபுகழ் - சிலர் இச்சொல்லை வினைத்தொகை எனவெண்ணி மிகுக்காமல் எழுதுகின்றனர்.   பலர் இச்சொல்லை வன்றொடர்க் குற்றியலுகரம் எனவெண்ணிப் மிகுத்து எழுதுகின்றனர்.

வன்றொடர் அல்லன முன் மிகா அல்வழி
[நன்னுால் - 181]

அல்வழிப் புணர்ச்சியில் நெடில்தொடர், மென்றொடர், இடைத்தொடர், ஆய்தத்தொடர், உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்களின் முன் வல்லினம் இயல்பாகும்.

காடு + பூத்தது = காடு பூத்தது - நெடில்தொடர்க் குற்றியலுகரம்
குரங்கு + தாவியது = குரங்கு தாவியது - மென்றொடர்க் குற்றியலுகரம்
சால்பு + பெரிது = சால்பு பெரிது - இடைத்தொடர்க் குற்றியலுகரம்
வரகு + சிறிது = வரகு சிறது - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
எஃகு + கடிது = எஃகு கடிது - நெடில்தொடர்க் குற்றியலுகரம்

வன்றொடர் அல்லன முன்மிகா என்றதால் வன்றொடரில் வல்லினம் மிகும்.

கொக்குப்பறக்கும் - எழுவாய்த் தொடர்
சுக்குத்திப்பிலி - உம்மைத்தொகை
ஈட்டுப்புகழ் - வினைத்தொகை
முறுக்குப் பிழிந்தான் - இரண்டாம் வேற்றுமைத் தொகை
பட்டுச்சேலை - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

இடைத்தொடர் ஆய்தத்தொடர், ஒற்றிடையில்
மிகாநெடில், உயிர்த்தொடர் முன்மிகா வேற்றுமை
[நன்னுால் - 182]

வேற்றுமைப் புணர்ச்சியில், இடைத்தொடர், ஆய்தத்தொடர், இடையில் ஒற்றுமிகாத நெடில்தொடர், இடையில் ஒற்று மிகாத உயிர்த்தொடர் ஆகியவற்றின் முன் வல்லினம் இயல்பாகும்.

தெள்குகால் - .இடைத் தொடர்
எஃகுகடுமை - ஆய்தத்தொடர்
நாகுகால் - ஒற்று இடையில் மிகாத நெடில் தொடர்
வரகுதாள் - ஒற்று இடையில் மிகாத உயிர்த்தொடர்

இவை யாவும் இயல்பாயின. மென்றொடர் முன்னும் வன்றொடர் முன்னும் வேற்றுமையில் வல்லினம் மிகும்.

குரங்குக்குட்டி - மென்தொடர்
கொக்குக்கால் - வன்றொடர்

1.
இடைத்தொடர், ஆய்தத்தொடர், ஒற்று இடையில் மிகாத நெடில்தொடர், ஒற்று இடையில் மிகாத உயிர்த்தொடர்  ஆகியவற்றின் முன் வேற்றுமைப் புணர்ச்சி அல்வழிப் புணர்ச்சி என்ற இருவழியும் வல்லினம் மிகாது.

2.
ஒற்று இடையில் மிகும் நெடில்தொடர், ஒற்று இடையில் மிகும் உயிர்த்தொடர், வன்றொடர் ஆகியவற்றுக்கு முன் வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி என்ற இரு வழியிலும் வல்லினம் மிகும்.

3.
மென்றொடர் அல்வழியில் வல்லினம் மிகாது. வேற்றுமையில் வல்லினம் மிகும்.

எழுவாய்த்தொடர், உம்மைத்தொகை இரண்டாம் வேற்றுமை தொகை ஆகியவற்றில் வல்லினம் மிகாது என்பது பொது விதி. ஆனால் வன்றொடர் குற்றியலுகரச் சொல்லாக  எழுவாய்த்தொடர், உம்மைத்தொகை, இரண்டாம் வேற்றுமைத் தொகை ஆகியன அமைந்தால் வல்லினம் மிகும் என்பது நன்னுால் உரையாசியர்களின் கருத்தாகும்.

ஆனால், ஏவலொருமை வினைமுற்றும், வினைத்தொகையும் வன்றொடர்க் குற்றியலுகர ஈற்றாயின் அவற்றின் முன் வல்லினம் மிகாது.

கட்டு பார்க்கலாம் - ஏவல் வினைமுற்று
சாற்றுகவி - வினைத்தொகை

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
05.02.2018

கோமூத்திரி



பசுவின் பாய்ச்சல் ஓவியக் கவிதை
[கோமூத்திரி]
  
குறள்வெண் செந்துறை
  
ஈசா உன்னையே எண்ணம் நாடும்
வாசா உன்னையே வண்ணம் பாடும்
  
பசுவானது நடந்தவாறு சிறுநீர் கழிக்க, உண்டாகும் சுவட்டின் மேல் எழுத்துக்கள் அமையும் பாடல். கோ - பசு, மூத்திரி - மூத்திர வடிவுடையது.
  
நேராக எழுதப்பட்ட இரண்டடிகள். சுவட்டின் வழியாகவும் அமைவதைக் காணலாம்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
05.03.2018